அப்சல்குரு தூக்கு தண்டனை நிறைவேற்றம் குறித்து தொலைக்காட்சி ஒன்றுக்கு
பேட்டியளித்த ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா,இது போன்ற
நடவடிக்கைகள் காஷ்மீர் பகுதி இளைஞர்கள் தங்களை இந்தியாவில் இருந்து
தனிமைப்படுத்திக் கொள்ளவும், விரோத மனப்பான்மையை உருவாக்கிக் கொள்ளவும்
வாய்ப்பு அளித்துவிடும். அப்சல்குருவை தூக்கிலிட்டு அநீதி
இழைக்கப்பட்டுள்ளதாகவே கருதப்படுகிறது. இதனால் பெரும்பான்மையான காஷ்மீர்
இளைஞர்கள் தவறான வழியில் செல்ல வாய்ப்பு அதிகரித்துள்ளது. அப்சல் குருவை
தூக்கிலிடும் முன்பு அவரது குடும்பத்தினரை சந்திக்க வாய்ப்பு ஏற்படுத்திக்
கொடுக்காதது துரதிருஷ்டவசமானது. இந்த விஷயத்தில் பல கேள்விகளுக்கு பதில்
அளிக்கப்பட வேண்டியுள்ளது. நான் எப்போதும் மரண தண்டனைக்கு எதிரானவன். இது
“தேர்வு செய்யப்பட்டு” வழங்கப்பட்ட தண்டனை அல்ல என்பதை காஷ்மீர்
மக்களுக்கும் உலகுக்கும் உறுதிப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. அவருக்கு
சீக்கிரமாகவே தண்டனை நிறைவேற்றப்பட்டுவிட்டது. இந்த தலைமுறை காஷ்மீர்
மக்கள் தங்களை அப்சல் குருவின் அங்கமாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள
வாய்ப்பு உள்ளது. அவர் மீதான விசாரணை சரியாக நடத்தப்படவில்லை என்பதே
காஷ்மீர் மக்களின் கருத்தாக உள்ளது. இதே கருத்துதான் நாட்டின் பல்வேறு
பகுதிகளிலும் எழுந்துள்ளது. இந்திய ஜனநாயகத்தின் அடையாளத்தின் மீது
நடத்தப்பட்ட தாக்குதல் என்று நாடாளுமன்ற தாக்குதல் வழக்கு கருதப்படுகிறது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி என்பவர் ஜனநாயகத்தின் அடையாளம் இல்லையா?
பஞ்சாப் முதல்வர் பியாந்த்சிங் தனது அலுவலகத்திலேயே படுகொலை
செய்யப்பட்டார். அவர் ஜனநாயகத்தின் அடையாளம் இல்லையா? என்று ஒமர் அப்துல்லா
கேள்வி எழுப்பினார்.